என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 8, 2010

சந்திப்பு



"பெண் பார்க்க வரலாமான்னு கேட்டு அந்த தாம்பரம் வரனின் அப்பா போன் பண்ணினார். ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லிடலாமா?"

ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்கவும் எரிச்சலானாள் வனிதா.

" போங்கப்பா. பெண் பார்க்கிறோம் பேர்வழின்னு கும்பலா வந்து ஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிடடு வீட்டுக்குப் போய் தகவல் சொலறோம், லெட்டர் போடறோம்னு சொல்றது. அப்புறம் பெண் கொஞ்சம் நிம் கம்மியா இருக்கா, உயரம் பத்தலைன்னு நொண்டிச் சாக்கு சொல்றதுன்னு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தண்டச் செலவு. வீண் சிரமம்...இதெல்லாம். எனக்குப் பிடிக்கலை" --- கறாராகச் சொன்னாள்.

" நல்ல குடும்பத்து பையன். கை நிறைய சம்பாதிக்கிறானாம். ஏண்டீ இப்படி ஆரம்பத்திலேயே தடங்கல் போர்டு வைக்கறே? " -- அம்மா தன் பங்குக்கு முழங்கினாள்.

" வேணும்ண்ணா ஒண்ணு ண்ணலாம். அந்த பையனை ஸ்பென்சர் பிளாசாவுக்கு வரச்சொல்லி பார்த்திடறேன். பிடிச்சிருந்தா மத்தவங்களோட வீட்டுக்கு வந்து பார்க்கட்டும். இதுக்கு ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்."

அம்மா எதிர்த்து ஏதோ சொல்ல அப்பாதான் அந்த பையனிடம் போனில் பேசி அதற்கு சம்மதம் வாங்கினார்.

வெள்ளிக்கிழமை. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த அந்த பீட்சா ஹட்டில் வனிதாவையும் அந்த பையனையும் பல ஜோடி கண்கள் பார்க்கத் தவறவில்லை.

சனிக் கிழமையே பதில் வந்துவிட்டது அவனிடமிருந்து. வருத்தம் தெரிவித்து.

அடுத்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலையிலேயே வந்த தரகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

'' நேத்து புதுசா ஒரு பையனோட ஜாதகம் வந்தது. ஏற்கனவே பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போயிடுச்சேன்னு ஒரு ஆதங்கத்தோட அவங் வீட்டில போய் உங்க பெண்ணோட போட்டோவை காண்பிச்சேன். அவங் அப்பாஅம்மாவுக்கு பிடிச்சது. ஆனா பையன் பார்த்துட்டு `'ந்த பெண்ணை ஸ்பென்சர் பிளாசா பீட்சா ஹட்டில் யாருடனோ பார்த்திருக்கேனே? வேற இடம் இருந்தா சொல்லுங்க'ன்னுட்டான்..."

_______________________________________________________________________

(5.12.10 தினகரன் "வசந்தம்"இதழில் வெளியான என் சிறுகதை)

Tuesday, December 7, 2010

"டெல்லி கணேஷும் நானும் "




அவ்வை ஷண்முகி படத்தில் நடிகர் டெல்லி கணேஷை மணிவண்ணன் கோஷ்டியினர் தெளிய வைத்து அடிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குபுக் என்று சிரிப்பு வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று அவர் அம்பத்தூர் ஹுமர் கிளப் நடத்திய கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் சில நகைச்சுவையான காட்சிகளை விவரித்தார். அது...

ஒரு நாள் ஏ.வி.எம் படப்பிடிப்பு நிலையத்தின் பின் புறம் உள்ள சுடுகாட்டில் ஒரு படத்துக்கான ஷூட்டிங் எடுத்தார்கள். நான் அங்கே நடிக்க சென்றிருந்தேன்.லஞ்ச் பிரேக்கின் போது அந்த சுடுகாட்டின் நிஜமான வெட்டியானுடன் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலைகளைப் பற்றியும் பேச்சுக் கொடுத்ததில் அவர் நெருங்கிய நண்பர் போல என்னிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு லஞ்ச் வரவழைத்து கொடுத்து மேலும் குஷிப்படுத்தினேன். மாலை ஷூட்டிங் முடிந்து எல்லோரும் சென்றுவிட்டோம். அதற்கு அப்புறம் வேறு ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டதால் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

ஒரு பதினைந்து நாள் கழித்து கோடம்பாக்கத்தில் என் கார் சிக்னலுக்காக காத்திருந்தபோது காரை ஓட்டி வந்த என்னை அந்த வெட்டியான் சைக்கிளில் இருந்தவாறே பார்த்து " என்ன சார் அங்கே எப்ப வர்றீங்க?" என்று ஒரு அணுகுண்டை வீசினார். நான் ஆடிப் போய்விட்டேன். அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனிடம் "இல்லப்பா எனக்கு இன்னும் மூணு நாலு கமிட்மென்ட்ஸ் இருக்கு, அது முடிந்ததும் நானே வந்துடுவேன் !" என்றேன்.
அதுக்கு அந்த வெட்டியான் " ஐயோ சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை,மறுபடியும் ஷூட்டிங்குக்காக எப்போ அங்கே வர்றீங்க? என்று தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ சார்! " என்றான். " இதை அப்போதே இப்படி கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று நான் அவனிடம் சொல்லவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது. அப்புறம் நான் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன்.

என்ன நண்பர்களே அவரின் நகைச்சுவையை ரசித்தீர்களா?

எல்லாம் சரி. தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? சம்பந்தம் இருக்கு.நடிகர் டெல்லி கணேஷ் என் நீண்ட நாள் நண்பர். அவரை மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரைப் பற்றி நான் என் நண்பர்களிடம் பேசும்போது டெல்லி கணேஷும் நானும் என்றுதான் பேச்சை ஆரம்பிப்பேன். இப்போ தலைப்பு சரியாப் போச்சா?

(இது ஒரு மீள் பதிவு)

Friday, December 3, 2010

விஷம் ரெடியா?



"ஏய் மீனா! கதவை தாழ்ப்பாள் போட்டியா?"


"போட்டுட்டேங்க!"

"பசங்களெல்லாம் தூங்கியாச்சா? எழுந்து வரமாட்டாங்களே?"

"நல்லா அயர்ந்து தூங்கறாங்க, இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாங்க!"







''ஆமா, சாயங்காலமே லெட்டர் எழுதி வைக்கச் சொன்னேனே, எழுதிட்டியா?"

"எழுதி டேபிள் மேலே வச்சிருக்கேங்க."

"சரி,சரி! விஷத்தை வாங்கியாந்து அந்த ஷெல்ப்பில் வச்சிருக்கேன். பார்த்து எடுத்துக்கிட்டு வா! பசங்க காலை மிதிச்சிடப் போறே, அதுங்க எழுந்து கிழுந்து வைக்கப் போவுது!"

"கொண்டாந்துட்டேன்..இந்தாங்க!"

"இப்படிக் கொடு, அந்தத் தட்டில் சோத்தைப் போடு, விஷத்தைக் கலந்துடலாம்."

"இந்தாங்க..சோறு கொஞ்சம் போதுமா, இல்ல நிறைய போடணுமா?"

"கொஞ்சம் போதும். அப்பத்தான் நல்லா வேலை செய்யும். "

"சோத்துல விஷத்தைக் கலந்துட்டேன். இந்தா நீ பாதி எடுத்துக்க, கொஞ்சம் கொஞ்சமா உள்ளே தள்ளு."

"சரிங்க, அப்படியே செய்யறேங்க."

"அப்பாடா! இன்றோடு எல்லாத் தொல்லையும் விட்டது. பொந்துக்குள்ள தள்ளின விஷ சோத்தை தின்னுட்டு எல்லா எலிகளும் வாயைப் பொளந்துகிட்டு செத்துக் கிடக்கப் போவுது பார். நீ எழுதி வச்ச லெட்டரை மறக்காம நாளைக்கு போஸ்ட் பண்ணிடு. எலிக்கு பயந்து சாகும் உன் தங்கச்சி, அதை எல்லாம் விஷம் வெச்சு சாகடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டு வந்துடுவா! என்ன நான்
சொன்னது புரிஞ்சுதா?"

"புரிஞ்சுதுங்க," என்றாள்.
_____________________________________________________________

(30.6.92 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)

Monday, November 29, 2010

இன்னும் ஒரு ஸ்பூன்





"அப்பப்பா! என்ன ஒரு அலைச்சல்? மீனாட்சி சூடா காபி கொண்டு வா,'' என்றவாறே வந்தார் சபேசன்.


"வயசான காலத்தில் கிருஷ்ணா ராமான்னு வீட்டில் இருக்காம சோஷல் சர்வீஸ் அது இதுன்னு உடம்பை ஏன் இப்படி வருத்திக்கறீங்க? எனக்கும் வயசாச்சில்ல? உங்களுக்கு சிசுருஷை செய்ய இனிமே என்னால முடியாது; இந்தாங்க," என்று காபியை அவரிடம் நீட்டினாள் மீனாட்சி.


காபியை வாங்கிக் குடித்தவர் "சர்க்கரை இன்னும் கொஞ்சம் போடணும், அப்பத்தான் வயித்தில் இறங்கும்" என்றார்.


ஒரு வாரமாகவே இப்படித்தான். முந்தின வாரம் சபேசன் உடம்பை பரிசோதித்த டாக்டர் சர்க்கரையை குறைவா உபயோகிக்கணும் என்று பயமுறுத்தியிருந்தார். ஆனால் சர்க்கரை குறைவாக போட்டு காபி கலந்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி கலக்கிக் கொண்டுதான் குடிப்பார்.


இரவு மாட்டுப் பெண் பகுளா ஊரிலிருந்து வந்ததும் நடந்தது அத்தனையும் அவளிடம் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டாள் மீனாட்சி.


மறுநாள் காலை பகுளா கலந்த முதல் காபியை கேட்டு வாங்கிக் குடித்த சபேசன் "தூ!தூ! என்று துப்பாத குறை!


"என்னம்மா இது? சர்க்கரையே போடலியா?" என்று கேட்டார்.


"ஆமாம் மாமா! சர்க்கரை வாங்கி வைக்க அவர் மறந்துட்டார். மத்தியான காபிக்கு வாங்கி வந்துடறேன், இப்ப குடிங்க" என்றாள்.


வேண்டா வெறுப்பாக குடித்து வைத்தார் சபேசன்.


மத்தியான காபியையும் சர்க்கரை போடாமலேயே குடிக்க வேண்டியதாயிற்று. கடைக்கு போய் வாங்கி வர முடியாமல் அடை மழை.


மறு நாள் காலை மீனாட்சி கலந்து கொடுத்த காபியை எவ்வித குறையும் சொல்லாமல் குடித்தார் சபேசன்.


மீனாட்சிக்கு ஆச்சரியம். "என்னடீ இது? முந்தா நாள், இன்னிக்கிப் போலவேதான் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு காபி கொடுத்தேன். தாம் தூம்னு அமர்க்களம் பண்ணினார். ஒரே நாளில் அவரை எப்படி மாத்தினே?" என்று கேட்டாள்.


"அது வேறொன்னுமில்லை அத்தை, ரெண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிச்சவருக்கு ஒரு ஸ்பூன் போட்டு காபி குடிப்பதுன்னா ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். நேத்து பூரா சர்க்கரையே இல்லாம காபி குடிச்சார். இன்னிக்கு அரை ஸ்பூன் போட்டு குடிச்சாலும் அவருக்கு உலகளவுக்கு இனிக்கிறது" என்றாள் பகுளா.




(18.1.93 "மங்களம்" இதழில் வெளியான என் சிறுகதை)

Monday, November 22, 2010

புதிரான ஊர்மிளா


"ஆனாலும் அந்த ஊர்மிளாவுக்கு ரொம்பத்தான் திமிர்! பாரேன்! நாங்க ரெண்டு பேரும் ஒரே தெருவில்தானே இருக்கோம்? நேற்று மாலை ஆசை ஆசையாய் அவ வீட்டுக்குப் போய் கோயிலுக்கு போகலாம்,ஒருத்தருக்கொருத்தர் துணையாச்சேன்னு கூப்பிட்டேன். உடனே மூஞ்சில அடிச்ச மாதிரி நிறைய படிக்கணும் உன்னோட வரமுடியாதுன்னுட்டா!" என்றாள் காயத்ரி.

"கரெக்ட் காயத்ரி! கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத ஜன்மம் !" என்றாள் ராதா.

"இரண்டு பேரும் சரியா சொன்னீங்க! மஞ்சு கல்யாணம் நடந்ததே, அன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். முதலில் சரின்னு சொன்ன அவளை நம்பி ஆறரை மணி வரை வீட்டில் காத்திருந்துவிட்டு ஏமாந்து போனேன். அப்புறமா பஸ்சை பிடிச்சு நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு கல்யாண சத்திரத்துக்குப் போனா எனக்கு பத்தடி முன்னே அந்த கனகாவோட பேசிட்டிருக்கா! நமக்கென்ன அழகில்லையா?அறிவில்லையா? நம்மோட வர கசக்கிற அவளுக்கு அந்த கனகாவோட மட்டும் போக இனிக்கிறதா? என்னிக்காவது அவ நம்மகிட்ட வராமலா போகப் போறா? அப்பா காட்டலாம் நம்ம வேலையை. பஸ் வருது, சீக்கிரம் வாங்க போகலாம்!" என்றாள் மீனா.

"ஏண்டி ஊர்மிளா, அந்த காயத்ரி உன்னை கோயிலுக்கு வரச்சொல்லி கூப்பிட்டாளாமே! நீ வர முடியாதுன்னுட்டியாமே! அவ அம்மா என்னை ரேஷன் கடையில் பார்த்து சொன்னா. ஏன் அப்படிச் சொன்னே? அவளோட போறேன்னா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்?" என்றாள் அம்மா.

"போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது! அந்த ராதா, மீனா, காயத்ரி எல்லாம் என்னைவிட அழகானவங்க. அவங்களோட நான் வெளியில் போனா என்னோட அழகு எடுபடாது. அதான் என்னைவிட அழகில் குறைந்த கனகாவோட எங்கேயும் போறேன்,வரேன். போற இடத்தில் எல்லாரும் என்னை பார்க்கறாங்க, என் அழகைப் பத்தி பேசறாங்க. அவங்களோட போனா என்னை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க. ஹும்! உனக்கு எங்கே இதெல்லாம் புரியப் போறது?" என்றாள் ஊர்மிளா தன் அம்மாவிடம்.

(7.11.90 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)




Wednesday, November 10, 2010

வளையாத மரம்











கொட்டிய மழையில் குளித்து,
அடித்த புயற் காற்றில்
தலையாற்றிக்
கொண்டிருந்த என்னை,
'தலை விரித்தாடிற்று தென்னை'
என்று செய்தி போடுகிறீர்களே?
என் ரசனையைப் புரிந்துகொள்ள
மறுப்பதென்னே?
கேட்டது தென்னை மரம்.

Thursday, October 21, 2010

பயம்







'தோட்டத்தில் ஓடும்
முயல் குட்டியைப் பிடித்து
முத்தம் கொடுக்கலாமா?'
ஆசையுடன் கேட்கும் குழந்தை.

'கூடாது, அது கடிச்சிடும்!'
பயமுறுத்தும் தாய்.


'பிள்ளையார் எறும்பின்
கிட்டே போகலாமா?'
பயத்துடன் கேட்கும் குழந்தை.

ரொம்பவேதான்
பயமுறுத்தி விட்டோமோ?
படபடப்புடன் வாரியணைத்து
முத்தமிடும் தாய்.

<><><><><><><><><><><><><>

Tuesday, October 12, 2010

இட மாற்றம் // இன்னொரு பக்கம்


1.இட மாற்றம்


எப்போதுமே

இடம் மாற்றிப்

படுத்தால் அவனுக்கு

வராத தூக்கம்

வந்தது அன்று

அவசர சிகிச்சைக்காக

மருத்துவமனையில்

சேர்த்த அரை மணியில்

நிரந்தரமாக.


<><><><><><><><><><><><><><><><>


2. இன்னொரு பக்கம்


வேட்டியின் இரு பக்கங்களையும்

மாற்றி மாற்றிக் கட்டி

அழுக்காகிய பின்

மனசுக்குள் அழுதான்.

'மூன்றாவது பக்கமும்

இருந்திருக்கக் கூடாதா,

சோப்பு வாங்க காசு

இல்லையே?


--ரேகா ராகவன்.

<><><><><><><><><><><><><><><>

Tuesday, October 5, 2010

திட்டு

"ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்குத் தலையெழுத்தா என்ன?"

அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

நடந்தது இதுதான்.

இரவுக்குள் முடித்து ஆபீஸுக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன். ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி, இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்திரவு கொடுத்தார். அவரிடம் எரிந்து விழுந்தேன்.

"அவனோட சின்ன வயசிலே அப்படி இப்படின்னு சந்தேகம் கேட்கறச்சே சலிக்காம எத்தனையோ விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்ப எனக்கு வயசாகிடுச்சுல்ல, ஞாபகசக்தி குறைஞ்சிகிட்டு வருது, விடு கமலா"ன்னு அம்மாவிடம் அப்பா சொல்லவும் இந்த வயசிலும் கத்துக்கறதில் ஆர்வத்தோடு இருக்கற அப்பாவிடம் இனி இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று மனசுக்கு கட்டளையிட்டேன்.

(15.4.2009 " குமுதம் " இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Tuesday, September 28, 2010

வாங்க மாட்டேன்



" இன்னிக்கு காலையில் யார் முகத்தில் முழிச்சோமோ, மாட்டினவனெல்லாம் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு போறாங்களே!" என்று டிராபிக் சார்ஜண்ட் சரவணனுக்கு குஷியோ குஷி.

டூட்டி முடிந்ததும் வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவரின் முன்பு எட்டாவது படிக்கும் அவரின் மகன் தீபன் கையில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுடன் நின்றிருந்தான். அதை வாங்கிப் பார்த்தவருக்கு சப்பென்றாகிவிட்டது.

"என்னடா மூன்றாவது ரேங்க் வாங்கியிருக்கே! முதல் ரேங்க் வாங்கினா சைக்கிள் வாங்கித் தருவேன்னு சொன்னேனே! மறந்துட்டியா?"

கேட்ட அப்பாவை மேலும் கீழுமாக பார்த்த தீபன் " வேணாம்ப்பா, நல்லா படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பின்பு நானே பைக் வாங்கிக்குவேன், உங்க பணம் எனக்கு வேணாம்" என்றான்.

"டேய் அப்படியெல்லாம் அப்பா கிட்டே சொல்லக்கூடாது!"-- அம்மா அவனை அடக்கினாள்.

" நான் அப்பாவின் பணத்தை வேணாம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கும்மா! ஏற்கனவே என் ஸ்கூல் பசங்க " டேய் உங்கப்பா ஸ்கூட்டர், லாரி ஓட்டறவங்ககிட்டல்லாம் லஞ்சம் வாங்கித்தானேடா உன்னை படிக்க வைக்கிறாரு அப்படீங்கறாங்க..." -- அவன் சொல்லிமுடிக்கவும்,

"என் கண்ணை திறந்துட்டேடா நீ! நாளைக்கே என்னோட உயரதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டு வேற போஸ்டிங்குக்கு போயிடறேன் போதுமா?"

சொன்ன அப்பாவை வாஞ்சையுடன் பார்த்தான்.

Saturday, September 25, 2010

எல்லாமே... / மீட்சி / அது

1. எல்லாமே...

பாத்திரத்தை குலுக்கிக்
கேட்டான் பிச்சைக்காரன்
உடம்பை குலுக்கிக்
கதா பாத்திரம்
படைத்தாள் கவர்ச்சி நடிகை
வயிற்றுப் பசிக்கான ஓட்டத்தில்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

2. மீட்சி

மீண்டும் வருவேன்
என்று சொல்லிவிட்டு
பதவியுடன் வந்தார்
ஊழல் மந்திரி .
மீண்டு வருவேன்
என்று சொல்லிவிட்டு
வராமல் போனது
மீனவன் வலையில்
அகப்பட்ட மீன்.


<> <> <> <> <> <> <> <> <> <> <>

3 . அது!

ஊரில் திருவிழா.
இருப்பவனுக்கு சொர்க்கம்
இல்லாதவனுக்கு நரகம்
கையில் பணம்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

Thursday, May 13, 2010

சம்பாத்தியம்


பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.


ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.


அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .


இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய் " அய்யா சம்பளத்தை கொடுத்தீங்கன்னா இவனை அனுப்பிச்சுடுவேன், அப்புறம் எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாது" என்றார் மாசிலாமணி.


" இவன் இந்த வருஷம் இன்ஜினியரிங் காலேஜில் சேரப்போறான் இல்லே? நீ கேட்டிருந்த அட்வான்ஸ் பணம் பத்தாயிரமும் தர்றேன். ஆனா லீவு போடாம வேலை செய்யணும் புரிஞ்சுதா ? " என்று சொல்லியவாறே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.


பணத்தை வாங்கி சரவணனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு "ரொம்ப நன்றிங்க முதலாளி" என்றார் .


" இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். ஓவ்வொரு மாசமும் உன் பையனை இங்க வரவைச்சு சம்பளப்பணத்தை கொடுத்தனுப்பணுமா? ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...


"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை. நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.


" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா " என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.

-ரேகா ராகவன்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

Friday, April 30, 2010

பாராட்டு/ பசி/ இருவர்/வலை




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். முதலில் பதிவுலகத்துக்குள் " ரேகா ராகவன் " என்ற இந்த வலைப்பூவில்தான் என் பயணத்தை தொடங்கினேன். அதன் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியான என் சிறுகதைகளுக்காகவும் வலைப்பூவுக்கென வடிவமைத்து எழுதும் சிறுகதைகளை வெளியிடவும் "அன்பே சிவம்" என்ற வலைப்பூவையும் தொடங்கி என்னால் இயன்ற வரையில் நல்ல கருத்துக்களை சொல்ல ஓரளவுக்கு முயன்று வருகிறேன். அந்த வகையில் இரு வலைப்பூக்களிலும் இதுவரை 49 பதிவுகளை இட்டிருக்கிறேன். இது எனது 50-வது பதிவு. உங்களின் நல் ஆதரவோடு மேலும் பல நல்ல பதிவுகளை எதிர் காலத்தில் தர விழைகிறேன்.



1. பாராட்டு

வெற்றி பெற்ற சினிமாவின்
இயக்குனருக்கு பாராட்டு விழா.
மூலக் கதையை எழுதியவன்
சோகத்தோடு மூலையில்.

2. பசி

பொம்மைக் குழந்தைக்கு
பால் கொடுப்பது போல
நடித்துக்கொண்டிருந்தது
பசியோடிருந்த குழந்தை.

3 . இருவர்

பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு.

4. வலை

திருடனை வலை வீசி
தேடினது போலீஸ்
கடைசியில் அகப்பட்டான்
ஒரு அப்பாவி.



கவிதை எழுதும் கலைஞன் பெருமைக்கு உரியவன் என்றால், ஒரு நிலத்தை உழுபவனும் கவிஞன்தான்!

Thursday, April 22, 2010

நம்பிக்கை



தினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.

தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.

மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.

எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.

" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.

நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.


அன்பை எப்போதும் ரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்

Saturday, April 10, 2010

யார் அழகு?




கபாலீஸ்வரர் கோவில்.

பிரதோஷ பூஜை தரிசித்து கோயில் பிரகாரத்தை மஞ்சள் நிற சுடிதாரில் கமலாவும்
ஆரஞ்சு சுடிதாரில் வைதேகியும் வலம் வந்துகொண்டிருந்தனர் .

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

முதல் நாள் தான் முடிந்திருந்தன கமலாவின் காலேஜ் தேர்வுகள். அரியர்ஸ் இல்லாமல் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறணும் என்று வேண்டிக் கொள்வதற்காகவும் இருவரில் யார் அழகுன்னு வைதேகிக்கு புரிய வைக்கவும் பக்கத்து வீட்டு வைதேகியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள்.
இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும்போதுதான் முன்னே சென்று கொண்டிருந்த மாமி அவள் பெண்ணிடம் " பின்னாடி மஞ்சள் சுடிதாரில் வர்றவ அழகா இருக்கா இல்லே?" என்று கேட்க, அவளுடைய பெண் திரும்பி பார்த்துவிட்டு " போம்மா உனக்கு ரசனையே இல்லே. அவளை விட அவள் பக்கத்தில் ஆரஞ்சு சுடிதாரில் வர்ற பொண்ணுதாம்மா நகை எதுவும் போட்டுக்காமலேயே களையா கண்ணுக்கு லட்சணமா இருக்கா " என்றாள்.

" பார்த்தியாடி! நான் ஏழை, போட்டுக்க நகைநட்டுன்னு ஒண்ணும் இல்லே, அதான் யாருமே வராத நேரம் பார்த்து கோவிலுக்கு போயிட்டு வருவேன்னியே? நகைக்கடையா வந்திருக்கிற என்னை விட நீ தான் அழகுன்னு சொன்னதை இப்ப உன் காதால கேட்டே இல்ல? உன் தாழ்வு மனப்பான்மையை இனிமேலாவது மூட்டை கட்டி வெச்சுட்டு வாழக் கத்துக்கோ! " என்று கமலா கூறவும் ...

மூன்றாவது சுற்றை சந்தோஷமாக வலம் வந்தாள் வைதேகி.


Thursday, March 11, 2010

வேட்டை

கிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.
அதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .

"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே?" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.

" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்".

"எ...ன்னது உனக்குத் தெரியாதா? அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே?"

"ஆ...ஆமாம். சார்"

'பின்னே தெரியாதுங்கறே! அவ யாருன்னு தெரியுமா? தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி. மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்கு அரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமா? மூணு லட்சம்! மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்".

அதிர்ந்தான் அறிவழகன். தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா? தெரியாமல் போய்விட்டதே!

டூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு, அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். "உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்.."

அவள் சம்மதித்தாள். அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து, அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனுப்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"சார்..சார், உண்மையை சொல்லிடறேன் சார்," என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன்
போட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.

"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு!".

" எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை."

--- அறிவழகன்.

என்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே?'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை
எடுத்து பவ்யமாக நீட்டினான்.

கிண்டி போலீஸ் ஸ்டேஷன்.

"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கி?அவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே? இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே! உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு" .

"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.

( "பாக்யா" இதழில் வெளியான என் சிறுகதை )

எதையும் செய்த பிறகு அழுவதைவிட அதை செய்யாமல் இருப்பதே நலம்

Saturday, March 6, 2010

அவர்கள்


ந்திராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்பனாவை நம்பாமல் பார்த்தாள்.

"என்னுடைய வீட்டுக்காரர் அப்படிப்பட்டவர்னா சொல்ற?"

"நான் கண்ணால் பார்த்ததைத்தான் சொல்றேன். நேத்திக்கு அவ வீட்டுக்குப் போயிருந்தேன். அவ கட்டியிருந்த புடவை நல்லாயிருந்ததால் எங்கே எடுத்ததுன்னு விசாரிச்சேன். முதலாளி எடுத்துக் கொடுத்தார்ன்னு சொன்னா. எனக்கு மனசுகுக்குள்ள சுருக்குன்னு ஆயிடுச்சு. உடனே இந்த விஷயத்தை உன் காதுல போட்டுடம்ணுதான் ஓடி வந்தேன். அந்த பொண்ணு உமாவை உன் கணவனோட பாக்டரியில் வேலைக்கு எடுத்துக்கச் சொல்லி சிபாரிசு பண்ணது நான்தான். பின்னாடி நீ என்னைக் குத்தம் சொல்லக் கூடாதேன்னுதான் இப்பவே வந்து எச்சரிக்கை பண்ணிட்டேன்.

ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஹரி சந்திராவின் கோபமான முகத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

"என்னாச்சு சந்திரா? எப்பவும் சிரிச்ச முகத்தோட என்னை வரவேற்பியே! இன்னிக்கு ஏன் கோபமா இருக்கே...?"

"நீங்க ஆசையா புடவை எடுத்துக் குடுத்திருக்கீங்களே... அவகிட்ட போங்க... அவ உங்கள சிரிச்ச முகத்தோட வரவேற்பா..." கோபமும் அழுகையும் ஒரு சேர வெடித்தாள் சந்திரா.

" ஏய்... நீ என்ன சொல்ற...?"

"உங்க பாக்டரில வேலை பார்க்கற உமாங்கற பொண்ணுக்கு நீங்க புடவை எடுத்துக் கொடுத்திருக்கீங்க...இல்லைன்னு சொல்லுங்க?"

ஹரியின் திகைப்பு விலகியது.

"இதுதான் கோபத்துக்குக் காரணமா?"

"கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவளுக்கு நீங்க புடவை எடுத்துத் தந்தீங்களா இல்லையா?"

"ஆமா தந்தேன். அவளுக்கு மட்டுமில்லை. என்னோட பாக்டரியில வேலை பார்க்கற பத்துப் பொண்ணுங்களுக்கும் ஒரே கலர்ல புடவை, ஜாக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கேன்..."

சந்திரா வியப்பு படர கணவனைப் பார்த்தாள்.

"எ... எதுக்கு?"

"பாக்டரில வேலை பார்க்கற பெண்கள் தினமும் டியூட்டிக்கு வந்ததும் அவ அவ கட்டியிருக்கிற புடவையையும் ஜாக்கெட்டையும் பத்திப் பேசியே ஒரு மணி நேரத்தை வீனடிக்கறாங்க. எனக்கு ப்ரொடக் ஷன் லாஸ் ஆகுது. அதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. இப்ப எதைப் பத்தியும் பேச்சே இல்லை. வேலை ஒழுங்கா நடக்குது."

சந்திரா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "உங்களைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்க" என்று நிம்மதிப் புன்னகை பூத்தாள்.

( "குங்குமம்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை )

வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய். கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்

Friday, March 5, 2010

இவர்கள்

நான் சத்தியகுமார். வயது 35. எம்.பி.ஏ.

நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் திருச்சி கிளை மேனேஜர்.

மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவன். தூய்மை எனது தாரக மந்திரம்.

மறுநாள் சென்னையில் நான் பணியாற்றும் வங்கி
ஸ்பான்சர் செய்யும் செமினாரில் கலந்து கொண்டே ஆக வேண்டும். அன்று முகூர்த்த நாள் வேறு. எந்த ரயிலிலும் ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. ஏகக் கூட்டம். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்வது முள்ளில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது.
இயற்கை உபாதையின் அவசர அழைப்பால் கழிப்பறையைத் தேடிப்போனவனுக்கு அதிர்ச்சி. பார்க்கவே அருவருக்கத்தக்க பிச்சைக்காரன் ஒருவன் வழியில் படுத்திருந்தான்.

பூட்ஸ் காலால் சப்தமெழுப்பிவிட்டு, "நான்சென்ஸ், இவங்களெல்லாம் ரயிலில் வரலேன்னு யார் அழுதா?" என்று மனசுக்குள் சபித்தவாறே "அந்தாண்ட போய் படுய்யா" என்றேன் அதட்டலாக.

மின்சார எஞ்சின் மாற்றுவதற்காக விழுப்புரத்தில் ரயில் சற்று கூடுதல் நேரம் நின்றது. ஒரு டீ சாப்பிடலாம் என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அதிர்ந்தேன். பர்ஸை காணவில்லை.

கழிப்பறையில் பேண்ட் பாக்கட்டிலிருந்த பர்ஸை எடுத்து மேல் தட்டில் வைத்தேன். முழுசாய் ஆயிரம் ரூபாய், கிரெடிட் கார்டு, பயிற்சிக்காக அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்ல வாங்கியிருந்த விமான டிக்கட் எல்லாம் அடியோடு போய்விட்டதே! என்ன செய்வது?

"சார், இது உங்களதுதானே?" குரல் கேட்டு நிமிர்ந்தேன். என்னிடம் ஒரு பர்ஸைக் காட்டிக் கேட்டான் அந்தப் பிச்சைக்காரன்.

"எ...எ... என்னுடையதுதான், ரொம்ப நன்றிப்பா" .. சொல்லிவிட்டு அவன் கொடுத்த பர்ஸை வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டேன்.

இப்போது அவன் எனக்கு அருவருப்பாகத் தெரியவில்லை.

(" குங்குமம் " இதழில் வெளியான என் சிறுகதை)
நேர்மையை ரொம்பவும் பாராட்டுவார்கள்.ஆனால், அவர்களைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.

Monday, March 1, 2010

அறிவு : பயம் : கர்வம்



அறிவு


பதவிகள் வரும் கூடவே தலைக்கனமும்.


போனபின்பு வரும் மொத்த அறிவும்.


எப்போதும் இயல்பாய் இருப்பவனுக்கு


போகாது அறிவு எந்தக் கணமும்.


பயம்


கனவுகள் வரும் கூடவே பயமும்.


கலைந்த பின்பும் மிச்சமிருக்கும்.


கனவே வராதவனுக்கும் வரும்


எதிர்காலம் பற்றிய பயம்.


கர்வம்


வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு


பயமிருக்குமா திசை மாறிவிடுவோமோ என்று?


இருக்காது உயர உயரப் பறந்தாலும்


தன்னுள் கர்வத்தை அண்டவிடாததால்.

Thursday, February 25, 2010

போதிக் கண்

"வாசனை ஊதுவத்தி, நறுமண சாம்பிராணி வாங்கிக்குங்க சார்."

சம்பள நாள் அன்று குருடன் ஒருவன் அலுவலகத்தில் நுழைந்து விற்றுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா, யார் அவனை உள்ளே விட்டது?" கத்தினேன் நான்.

"ஹெட் கிளார்க் சார்! இரண்டு கண்ணும் தெரியாத குருடன் அவன். பிச்சை எடுக்காம ஏதோ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். கண்டுக்காம போங்க சார்" என்று டைபிஸ்ட் ஏகாம்பரம் கூறினான்.

எம்.டி. இன்ஸ்பெக் ஷன் . எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

"சார், உங்களை அந்த ஒர்க்ஸ் பைலை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் எம்.டி." ஆபிஸ் பையன் வந்து சொல்லவும் மயக்கம் வராத குறைதான் எனக்கு. என்ன கேட்கப் போகிறாரோ?"

"என்ன மிஸ்டர் இது? முக்கியமான பைலில் இங்க்கை கொட்டி வச்சிருக்கீங்க? இதுதான் நீங்க செய்யற வேலையின் லட்சணமா?"

"சார்... அவசரத்தில் கை தவறி.. கொட்டி... சாரி சார்... இனிமே... " வாய் குழறியது எனக்கு.

"லுக் மிஸ்டர், அவசரத்திலும் ஒரு நிதானம் இருக்கணும். ரயில்ல, பஸ்ல லாட்டரி டிக்கட், ஊதுவத்தி,பிளாஸ்டிக் கவர்னு விக்கற குருடர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ்
பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" -- எம்.டி.கூறவும்,

போன மாதம் ஊதுவத்தி விற்க வந்த அந்த குருட்டு இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து.

( "குங்குமம்" 10.12.99 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

மென்மையாக நடந்து கொள்ளுங்கள். துணிவுடன் இருப்பது சாத்தியமாகும்

Wednesday, February 24, 2010

கை மேல் பலன்

கண்களில் ஒரு வித மிரட்சியுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. முந்தின நாள் ஒரு கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சவால் விட்டுவிட்டுப் போயிருந்ததே அவளின் மிரட்சிக்குக் காரணம்.

தினமும் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே பெண்கள் மேல் விழுந்துவிட்டு 'சாரி' சொல்வதும், புடவைத் தலைப்பை இழுப்பதும், முதுகில் கையை படரவிடுவதும், ஃ பிளையிங் கிஸ் கொடுப்பதும்.. நினைக்க நினைக்க அவள் முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. முந்தின நாள் ஒரு படி மேலே போய் "நாளைக்கு பஸ்ஸிலிருந்து இறங்கறப்ப இவங்க இடுப்பைக் கிள்ளி விட்டு இறங்கலேன்னா என் பெயரை மாத்திக்கறேன்டா" என்று அவள் காது படவே சொல்லிவிட்டுப் போயிருந்தான் அந்தக் கல்லூரி மாணவன்.

அவன் வந்திருக்கிறானா என்று பஸ்ஸினுள் ஒரு நோட்டம் விட்டாள். சவால் விட்ட ஃபங்க் தலையன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவளையும் அவள் மடியையும் வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.

பஸ் அடுத்த ஸ்டாப்பிங்கை நெருங்கும் சமயம் "டேய் நல்ல வேளை இன்னிக்காவது தெரிஞ்சுதே! இல்லேன்னா நேத்து போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இடுப்பைக் கிள்ளிட்டு இந்நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாளா எப்படிடா நாம பண்ணின சில்மிஷங்களை பொருத்துகிட்டிருந்தாங்க?"

நண்பனிடம் கூறிவிட்டு அந்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்விட்டான் அந்த ஃபங்க் தலையன். அவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் இறங்கிவிட்டான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் "ரொம்ப தாங்க்ஸ்" என்றவாறே பவித்ராவிடம் கொடுத்து வைத்திருந்த தன் யூனிபார்மை வாங்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிப் போனார் ஒரு பெண்மணி.

ஒரு பெண் போலீஸின் கையில் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை வாங்கி தன் மடியில் வைத்திருந்ததற்கு இப்படி கை மேல் ஒரு பலனா?

நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

(14.5.98 "சாவி" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

"வெற்றி--தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல!அவை முழு வாழ்வையும் சார்ந்தவை"

Saturday, February 20, 2010

கலைத்துவிடு காவ்யா




வீடும் நர்ஸிங் ஹோமும் சேர்ந்தே கட்டப்பட்டிருந்த டாக்டர் நளினியின் நர்ஸிங் ஹோமுக்கு காவ்யா போய்ச் சேர்ந்தபோது அங்கு நாலைந்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

"உங்களுக்கு இது எத்தனாவது மாசம்?" என்று ஒருத்தி கேட்டாள், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம்.

"ரெண்டு மாசம் முடிஞ்சிடுச்சு. ஏற்கனவே ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க. எங்கே இதுவும் பொட்டையா பிறந்திடப்போவுதேன்னு இதை கலைச்சிடனும்னு ஒத்தைக் காலில் நிக்கறாங்க மாமியாரும், நாத்தனாரும். அவங்க தொல்லை பொறுக்க முடியலை" என்றாள் அவள்.

"டாக்டர் வந்துட்டாங்க! டாக்டர் வந்துட்டாங்க!" கூட்டத்தில் யாரோ முணுமுணுத்தார்கள்.

வெளியில் ஒரு அவசர கேஸை பார்த்துவிட்டு, நர்சிங் ஹோமுக்குள் வரும்போதே, எல்லோரையும் தன் கண்களால் சர்வே செய்தவாறே வந்தாள் டாக்டர் நளினி.

காவ்யாவைப் பார்த்த மாத்திரத்தில் "அடடே வந்துட்டியா? வா,வா" என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் நளினி.

டாக்டர் நான் இங்கே வந்து இதை செஞ்சதைப் பத்தி என் வீட்டுக்காரருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் யார் மூலமாகவும் தெரியவே கூடாது. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. நமக்கு இருக்கற பணத்துக்கு எதுக்கு இப்படியெல்லாம் செய்யறே என்பார். நான்தான் மனசு கேட்காம வந்து இதை பண்றேன். அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள் நான் வீட்டுக்குப் போயிடணும்" என்று சொல்லிவிட்டு,

ஏற்கனவே பூஜை அறையில் போட்டிருந்த ரங்கோலி கோலத்தை கலைத்துவிட்டு டாக்டர் விரும்பியபடி, அந்த இடத்தில் புதிதாக ஐயப்பன் படத்தை ரங்கோலியில் போட ஆரம்பித்தாள் காவ்யா.

("சாவி" வார இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

சுதந்திரமாகச் சிந்தியுங்கள்! எண்ணப் பாய்ச்சலில் அண்ட வெளியில் பாய்ந்து பழகுங்கள்!

Friday, February 5, 2010

'அரசு'வும் நானும்

அது 1975-ம் வருடம். உதவியாளராக பொள்ளாச்சியில் பணியேற்ற போது என்னுடன் பணி புரிந்த நண்பர்களில் திரு எஸ்.முத்துகுமாரசாமி ஒருவர். அவர் 'முல்லை மணாளன்' என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி பல பரிசுகளை அள்ளியவர்.

நான் அவ்வப்போது சொல்லும் கருத்துக்களை கேட்டுவிட்டு "சார் நீங்க ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது ?"என்று கேட்பார். "அட போங்க சார்! நானாவது எழுதறதாவது? கிண்டலடிக்கறீங்களா?" என்று சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

ஒரு நாள் ஒரு போஸ்ட் கார்டில் 'குமுதம்' விலாசத்தை எழுதிக் கொண்டுவந்து " சார் இதில் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதுங்கள், மற்றதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். அவர் சொன்ன மாதிரியே முழு பக்கமும் கேள்விகளால் நிரப்பி ஒரு முன் எச்சரிக்கையாக என் பெயருக்குப் பதிலாக கே.பகவான், பொள்ளாச்சி என்று போட்டு அனுப்பிவிட்டேன்.

என்ன ஆச்சரியம்? அடுத்தவாரம் குமுதத்தில் அரசு கேள்வி-பதிலில் என்னுடைய முதல் கேள்வியையே போட்டு அதற்கு பதிலும் கொடுத்திருந்தார்கள். 'பார்த்தீங்களா, என்னவோ சொன்னீங்களே!' என்று அந்த நண்பர் சொல்லவும் சந்தோஷத்தில் என்ன பதில் சொல்வதென்பதே எனக்கு தோணவில்லை.

அப்புறமென்ன? வாரா வாரம் கே. பகவான் பொள்ளாச்சி, ரேகா ராகவன், கோவை என்று அரசு பதில்களில் தோன்றி ஒரே ஆரவாரம்தான். அப்போதெல்லாம் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையில் உள்ள முதல் எழுத்து 'அ'-வும், ரா.கி.ரங்கராஜனில் உள்ள 'ர'-வும் . ஜா.ரா.சுந்தரேசனில் உள்ள 'சு'-வும் சேர்த்து மூவரும் வாசகர்களின் கேள்விகளுக்கு 'அரசு' பதில்கள் என்று அளிக்கிறார்கள் என்பதாக ஒரு செய்தி உலா வந்துகொண்டிருந்தது. (பின்னால் அது எஸ்.ஏ.பி தான் என்பது குமுதத்திலேயே வெளியானது.)

அப்போதே அவர் பதில் அளிக்கும் விதத்தை கூர்ந்து கவனித்து எனது எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டு அதிலிருந்து வாசகர் கடிதம், சிரிப்பு, துணுக்குகள் என்று உலா வர ஆரம்பித்து சிறுகதைக்குள்ளும் புகுந்து பார்த்துவிட்டு இப்போது ப்ளாக்குக்குள்.

கேள்விகளுக்கு அரசு அளிக்கும் பதில்கள் சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். உதாரணத்துக்கு 'நகை உங்களுக்குப் பிடிக்குமா? ' என்ற என் கேள்விக்கு ' ஊஹூம் நான் போட்டுக் கொள்வதில்லை' என்று அவர் பதில் அளித்திருந்தார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். பொன் நகை மற்றும் நகைச்சுவை இவைகளை கருத்தில் கொண்டு பொதுவாக 'நகை' என்று குறிப்பிட்டிருந்தேன். அவரும் 'ஊஹூம் நான் போட்டுக் கொள்வதில்லை' என்று நகையையும் நகைச்சுவையையும் நான் போட்டுக்கொள்வதில்லை என்று இரு பொருள்பட பதில் அளித்து அசர வைத்தார். என் கேள்விகள் சிலவற்றையும் அதற்கு 'அரசு' அளித்த பதில்களையும் அதிலிருந்து தொகுத்து கீழே தந்துள்ளேன்.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: என் மனைவி எனக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுகிறாள்.

ப: சமையல் பரவாயில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தாரா? அதல்லவா முக்கியம்?

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: திருமணங்களில் 'டும் டும்' கொட்டக்கூடாது என்று ஓர் உத்தரவு போட்டால்?

ப: காது பாதி செவிடாகாவிட்டால் நமக்குக் கல்யாணத்துக்குப் போய் வந்த திருப்தியே இருப்பதில்லை. இது மரபு. மாநாய்கன் பெண்ணுக்கும் மாசாத்துவான் மகனுக்கும் நடந்த திருமணத்தின்போது 'முரசு இயம்பின, முருடு (மத்தளம்) அதிர்ந்தன" என்று வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள்.
<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: 'ப்ரா' வைக் கண்டுபிடித்தவன் எவன்?

ப: எவனாக இருந்தால் என்ன, அவன் வாழ்க.

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: சுத்தமான ஆங்கிலத்தில் எழுத இங்கிலிஷ்காரனாக இருக்க வேண்டும் என்பது அவசியமா?

ப: ஹிக்கின்ஸ் பாகவதர் பாடுகிறார், நம்பமுடியாத அளவுக்கு அற்புதமாகப் பாடுகிறார். ஆனாலும் கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளைதானே?


<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே. பெண்கள் வாய்ஸ் மட்டும் ஸ்வீட்டாக இருக்கக் காரணம்?

ப: வாய்ஸ் ' மட்டும் ' என்ன மட்டும்? முழுக்கவே ஸ்வீட்தான். (ஆண் குரலோடு ஒப்பிட்டுக் கேட்கிறீர்களா? ஸீரியஸ் கேள்வியா? குரல்வளையில் திரை மாதிரி இரண்டு சவ்வு உண்டு. காற்று வெளியேற்றப்படும்போது அவை அதிர்வதால் ஓலி உதிக்கிறது--வீணைத் தந்தி மீட்டப்பட்டதும் நாதம் ஜனிப்பது போல. ஸ்வீட் ரகசியம்: ஜேசுதாசின் குரல் வளையிலுள்ள திரையைவிட, எஸ்.ஜானகியின் குரல் வளையிலுள்ள திரை மெல்லியது, நீளம் குறைவானது.)

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: நீங்கள் படமெடுத்தால் என்ன ?

ப: எடுத்து என்ன பயன்? என் பல்லில் விஷம் இல்லையே.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: எங்கள் பாட்டி சொர்கத்துக்குப் போனாளா அல்லது நரகத்துக்குப் போனாளா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ப: உங்கள் பாட்டி எந்தத் திசையில் சென்று கொண்டிருந்தார் என்பது அவர் உயிரோடிருக்கும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: எப்போதும் சோகமாக முடிவது ஏது?

ப: வாழ்க்கை.


<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: வாழ்க்கை எப்போது கசக்கிறது?எப்போது இனிக்கிறது ?

ப: இளமை அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். நாலைந்து நண்பர்கள் நாங்கள். ஒருவர் தங்கக் கட்டி. அவரைக் கோட்டா பண்ணுவது, மற்றவர்களது அன்றாட பொழுது போக்கு. அவர் சிரிப்பு மிஷின். ஒன்றும் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே இருப்பார். நான் மற்றவர்கள் கலந்து கொள்ளும் கேலியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பேன். ஒரு நாள், அவரை நாமும் கிண்டல் செய்தால் என்ன என்று ஒரு ஆசை உண்டாயிற்று. சிரித்துக்கொண்டே ஏதோ சொல்லி வைத்தேன். பளிச்சென்று ஒரு பதிலடி கொடுத்தாரே பார்க்க வேண்டும். உலகத்து அசடெல்லாம் என் முகத்துக்கு வந்துவிட்டது. வாயில்லாப் பூச்சிகளிடம் கூட அனாவசியமாக வாயை கொடுக்கலாகாது என்று உபயோகமான தீர்மானத்துக்கு வர அன்றைய அனுபவம் எனக்குத் துணை செய்தது. குட்டுப்படும்போது வாழ்க்கை கசக்கிறது. பாடத்தைக் கற்றுக் கொண்டு அதன்படி நடக்கும்போது இனிக்கிறது.

Wednesday, February 3, 2010

மன அறை


முகம் தெரியாத முதியோர் கூட்டத்தில்

பத்தோடு பதினொன்றாய் இருந்து கொண்டு

பாசமாக இருப்பது போல் பேசி சிரித்து

பாசாங்கு செய்ய எனக்குத் தெரியாது.


எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னை

தன் அன்பால் குளிப்பாட்டிய

உன் அப்பாவும் அவர் மறைவுக்குப் பின்

நீயும் உன் குழந்தைகளும் தானேடா!


பெற்று வளர்த்து ஆளாக்கி உனக்கோர்

திசையைக் காட்டிய எனக்கு நீ காட்ட வேண்டுமா

முதியோர் இல்லத்துக்கான திசை?



அங்கே போனாலும் இந்தப் பாழும் மனசு

உன்னைத்தானேடா நினைத்திருக்கும்!



வீட்டு வேலைகளை தலையில் கட்டி

மனைவி என்னை சக்கையாக பிழிவதால்தான்

என்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதாய்

நண்பனிடம் நீ போனில் பேசினதை

தற்செயலாய்க் கேட்ட போது

கருவறையில் உன்னை பத்து மாதம் சுமந்த எனக்கு

உன் மன அறையில் இடம் இருப்பது அறிந்து

மகிழ்ச்சிதான்.



அந்த நினைவுகளுடனே

அங்கே வாழ்ந்து முடிப்பேன் என் ஆயுளை!

வரட்டுமா என் ராசா?

-- ரேகா ராகவன்.

மகிழ்ச்சியோடு சுமந்தால் எத்தகைய பாரமும் இலகுவாயிருக்கும்

Sunday, January 31, 2010

ஏன் உன் மனைவி வரலை?


"என்னங்க இது... திடீர்னு இப்படிச் சொன்னா எப்படி? நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது? இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே?" ஏமாற்றத்துடன் கணவன் கணேசனிடம் கேட்டாள்.

"இல்ல மீனா, எனக்கு மதுரைல திடீர்னு இன்ஸ்பெக் ஷன் போட்டுட்டாங்க. கல்யாணத்துல தலைய காட்டிட்டு அப்படியே டிரெயின் எறிடறேன்!"

"என்னமோ போங்க. கல்யாணத்துக்குன்னு புதுசா புடவைலேர்ந்து சகலமும் வாங்கியிருந்தேன். ம்... ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.

திருமண மண்டபத்தில்...

"என்னடா நீ மட்டும் வந்திருக்க? உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?" கேட்ட ஜனார்த்தனனை ஓரமாக அழைத்துச் சென்றான் கணேசன்.

"பத்து நாளைக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன சொன்ன? உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல? அதனாலதான் என் பெண்டாட்டிய கூட்டிட்டு வரலை..."

"என்னடா சொல்ற?"

"பின்னே என்னடா... என் பையனுக்கு வரன் பேசி முடிச்சிருக்கேன். சீர் பத்தி பேச அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போறோம். இந்த நேரத்துல நீ ஷோவுக்கு வச்சிருக்கற சீரை என் பெண்டாட்டி பார்த்தா, அவளுக்கும் இதெல்லாம் வேணும்னு ஆசை வந்துடாதா? அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை!" என்றான் கணேசன்.

(21.8.2008 "குங்குமம்" இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை.)
"சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும்! பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும்! சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும்!"

Tuesday, January 26, 2010

பாசம்.


பாசம்.


கூட்டில் குஞ்சுகளை

பொத்திப் பாதுகாக்கும்

தாய்ப்பறவை நெஞ்சிலிருப்பதும்

வீட்டில் குழந்தைகளை

போற்றிப் பாதுகாக்கும்

தாயின் நெஞ்சிலிருப்பதும்

ஒன்றே...


<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>



'ம்'


பார்த்தேன் படித்தேன் செய்தேன்.

ருசித்தான் என் நண்பன்.

சமையல் கலை

புத்தகத்தைப் பார்த்து நான் செய்த

உப்புமாவுக்கு அவன் அடித்த கமெண்ட்

'ஒரே உப்பும்மா!'.


<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>



மீட்சி

எல்லா சேனலுக்குள்ளும் போய் பார்த்தாயிற்று.

அதே மாவை

அரைத்து அரைத்து...ஒரே போர்!

தினசரி,வார,மாத

இதழ்களையும் புரட்டியாச்சு.

கொலை, கொள்ளை, மோசடி,

ஊழல், கற்பழிப்பு, அரசியல் தந்திரம்..

ஒரே எரிச்சல்!

அத்தனையும் கடாசிவிட்டு

படுக்கையில் விழுந்தேன்

ரேடியோவுடன்

இணைத்த ஹெட் போனை

காதில் மாட்டிக் கொண்டதும்

தேவாமிர்தமாக இசை

காதுக்குள் நுழைய

ஆஹா... இதுவல்லவோ சொர்க்கம்!

<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>

Friday, January 22, 2010

செல்லமே!




கிணற்றடியில் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தாள் திலகா, அந்த வீட்டுச் சின்ன மருமகள். பக்கத்தில், தேய்க்க வேண்டிய பாத்திரங்கள் நிறைய!

கைக்கெட்டுகிற தூரத்தில் வாஷிங் மிஷின்! அது மட்டுமா? ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், கலர் டி.வி-னு எல்லாம்தான் இருக்கு. ஆனால் எல்லாம் பணக்காரப் பெரிய மருமகள் பானு கொண்டு வந்ததாச்சே! எப்படி உரிமையோடு எடுத்து உபயோகிக்கமுடியும்?

அதுதான், இந்த ஒண்ணரை வருஷமாகத் துணி துவைக்கற கல்லோடும் அம்மிக்கல்லோடும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள் திலகா.

மறுநாள் காலை... விடாமல் தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குளித்துக் கொண்டிருந்த திலகா அவசர அவசரமாகத் துணிகளைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தாள்.

குழந்தை அலறிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாவகாசமாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"இப்படிப் பச்சைக் குழந்தையை யாராவது அலற விடுவாங்களா? கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா?" ..பொருமலுடன் கேட்டாள் திலகா.

"எடுத்துக் கொஞ்சி, சமாதானப்படுத்தி இருப்பேன் திலகா. ஆனா, குழந்தை இல்லாத நான், உன் குழந்தையைத் தொட்டுத் தூக்கினா உனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ! நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே!, சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம்!" என்ற பானு, "என் செல்லமே! அழாதடி! பெரியம்மா இருக்கேன்டி உனக்கு!" என்றபடி குழந்தையை வாரியணைத்து முத்த மழையால் குளிப்பாட்டினாள்.

(5.9.04 "ஆனந்த விகடன்" இதழில் 14 சிறுகதைகளின் தலைப்பை அப்போது வெளியான படங்களின் பெயர்களில் வெளியிட்டு அசத்தியதில் பிரசுரமான என் ஒரு பக்கக் கதை)


பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்

Thursday, January 14, 2010

குருதட்சணை

கொலுப் படிகளில் ரங்கநாதர், ராமன்,லக்ஷ்மணன், சீதை,முருகன்,காந்தி,நேரு என ஏகப்பட்ட பேர் குழுமியிருந்தார்கள். எதிரே, தரையில் அமர்ந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தையும் சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மயங்கி, 'அடடா! இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம்? முகத்தில் எத்தனை களை? ' என்று வியந்து அமர்ந்திருந்த கோபாலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் அவளுடன் பேசினவைகள் ஞாபகத்துக்கு வந்தன.

" வயலின் கத்துக்கறதை விட்டுடலாம்னு இருக்கேன் மேடம்!"

"என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக்கு?"

"இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொடர்ந்து வயலின் கத்துக்கிட்டா, அது ரெண்டு பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எதுவாக இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்."

"ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணைச்சுக் கன்னாபின்னான்னு பேசறாங்க!"

"வேலை வெட்டி இல்லாதவங்க எது வேணா பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வயலின் கத்துக்கறதைப் பாதியிலேயே நிறுத்திடறேன்னு சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க?"

"அது...வந்து..."

"இதோ பாருங்க, கோபால்! நான் பூவும் போட்டும் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் கணவருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் விதவை ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே இன்னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக்கேன். அதே போல இனி நான் யாரையும் மறுமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதிலும் உறுதியா இருக்கேன். அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தையைக் கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்தவளா நான் ஆகணும்னு நினைச்சா, தாராளமா நின்னுக்குங்க!".

சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி ஏறிச் சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந்தித்து மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து வயலின் கற்று அரங்கேற்றம் செய்தததில் சந்தோஷமானாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறான்.

'குறையொன்றுமில்லை' பாட்டை வயலினில் சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்து கை தட்டிப் பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண்ணை அறிமுகம் செய்தான் கோபால்.

"இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸிடென்ட்டில் கணவனைப் பறிகொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப் போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பார்த்துப் பேசி, பெரியவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப்படுத்த அழைச்சுகிட்டு வந்திருக்கேன். நல்ல உறவுகளை கொச்சைப்படுத்தினவங்களுக்கு இதுதான் பதிலாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதியுங்கள் மேடம்!" என்றான் கோபால்.

இருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த்துக்கொண்டிருக்க கையசைத்து அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

அவளின் மனசு இப்போது நிறைந்திருந்தது.

( 2006 "ஆனந்த விகடன் " தீபாவளி மலரில் வெளியான என் சிறுகதை )

எந்த வீட்டில் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களோ அந்த வீட்டில் எல்லாக் காரியங்களும் அவலமாகும்