என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 28, 2010

வாங்க மாட்டேன்



" இன்னிக்கு காலையில் யார் முகத்தில் முழிச்சோமோ, மாட்டினவனெல்லாம் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு போறாங்களே!" என்று டிராபிக் சார்ஜண்ட் சரவணனுக்கு குஷியோ குஷி.

டூட்டி முடிந்ததும் வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவரின் முன்பு எட்டாவது படிக்கும் அவரின் மகன் தீபன் கையில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுடன் நின்றிருந்தான். அதை வாங்கிப் பார்த்தவருக்கு சப்பென்றாகிவிட்டது.

"என்னடா மூன்றாவது ரேங்க் வாங்கியிருக்கே! முதல் ரேங்க் வாங்கினா சைக்கிள் வாங்கித் தருவேன்னு சொன்னேனே! மறந்துட்டியா?"

கேட்ட அப்பாவை மேலும் கீழுமாக பார்த்த தீபன் " வேணாம்ப்பா, நல்லா படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பின்பு நானே பைக் வாங்கிக்குவேன், உங்க பணம் எனக்கு வேணாம்" என்றான்.

"டேய் அப்படியெல்லாம் அப்பா கிட்டே சொல்லக்கூடாது!"-- அம்மா அவனை அடக்கினாள்.

" நான் அப்பாவின் பணத்தை வேணாம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கும்மா! ஏற்கனவே என் ஸ்கூல் பசங்க " டேய் உங்கப்பா ஸ்கூட்டர், லாரி ஓட்டறவங்ககிட்டல்லாம் லஞ்சம் வாங்கித்தானேடா உன்னை படிக்க வைக்கிறாரு அப்படீங்கறாங்க..." -- அவன் சொல்லிமுடிக்கவும்,

"என் கண்ணை திறந்துட்டேடா நீ! நாளைக்கே என்னோட உயரதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டு வேற போஸ்டிங்குக்கு போயிடறேன் போதுமா?"

சொன்ன அப்பாவை வாஞ்சையுடன் பார்த்தான்.

Saturday, September 25, 2010

எல்லாமே... / மீட்சி / அது

1. எல்லாமே...

பாத்திரத்தை குலுக்கிக்
கேட்டான் பிச்சைக்காரன்
உடம்பை குலுக்கிக்
கதா பாத்திரம்
படைத்தாள் கவர்ச்சி நடிகை
வயிற்றுப் பசிக்கான ஓட்டத்தில்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

2. மீட்சி

மீண்டும் வருவேன்
என்று சொல்லிவிட்டு
பதவியுடன் வந்தார்
ஊழல் மந்திரி .
மீண்டு வருவேன்
என்று சொல்லிவிட்டு
வராமல் போனது
மீனவன் வலையில்
அகப்பட்ட மீன்.


<> <> <> <> <> <> <> <> <> <> <>

3 . அது!

ஊரில் திருவிழா.
இருப்பவனுக்கு சொர்க்கம்
இல்லாதவனுக்கு நரகம்
கையில் பணம்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>